பொங்கல் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்

 பொங்கல் திருநாள்




    அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

          பொங்கல் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தமிழர்களின் மிக முக்கியமான விழாவும் இத்திருநாளே ஆகும். இடையில் பண்பாட்டுப் படையெடுப்பின் காரணமாகவும், உழவுத் தொழில் முதன்மையான தொழில் என்ற நிலையை இழந்ததாலும் பொங்கல் இன்று பொலிவிழந்து பல்வேறு விழாக்களுள் இதுவும் ஒன்று என்ற நிலையில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பண்டைய தமிழர்களின் வாழ்வில் பொங்கல் திருநாளை விடவும் சிறந்த விழா இருந்ததில்லை என்பதே உண்மை. இன்றைய தலைமுறையினருக்குப் பொங்கல் விழாவின் வரலாறு தெரிந்திருப்பதில்லை. அது ஏதோ சடங்கு போல மாறிவிட்டது. ஆகவே பொங்கலின் வரலாற்றை நாம் கண்டிப்பாக இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும். 

                அன்றைய தமிழருக்கு உழவை விடவும் சிறந்த தொழில் இல்லை. மருதநிலம் உழவுக்குச் சிறந்த நிலம். உழவின் சிறப்புக் கருதியே மருதநிலத்தின் தலைவனான வேந்தனை அரசனாக அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னாளில் இந்த வேந்தனை இந்திரனாகக் காட்டியது பண்பாட்டுச் சூழ்ச்சி! அதனை நாம் தவிர்க்க வேண்டும்.  ஆடிமாதம் தொடங்கிய வேளாண்மையின் பலன் தை மாதம் கிடைக்கும். பட்ட வேதனைக்கும் கொடுத்த உழைப்புக்கும் உரிய பலனை உழவர் காணும் நாள் தை முதல் நாள். 

    நீர் வளம் நிறைந்த இடங்களில் வருடம் மூன்று முறை அறுவடை நிகழும். ஆனால் நீர்த்தேவையுள்ள இடங்களில் ஆறுமாதத்திற்கு ஒருமுறையே அறுவடை நிகழும்.புதுநெல்லின் வாசமும், நெல் விற்ற பணத்தினால் ஏற்பட்ட செழிப்பும் மக்களை மகிழச் செய்யும் நாளான இன்று அந்த மகிழ்ச்சிக்குக் காரணமான சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக முதல் நாளை பெரும்பொங்கல் என்று கொண்டாடுவர். 

இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் 

                பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நன்னெறிப்படி வாழ்ந்த தமிழர், வருடமெல்லாம் நமக்காக உழைத்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடும் விழாதான் மாட்டுப்பொங்கல். அன்றைய நாள் முழுப் பெருமையும் மாடுகளுக்குத்தான்! 

ஏறுதழுவுதல் : 

        ஏறுதழுவுதல் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக  நம் தமிழ்நாட்டின் வீர விளையாட்டாகத் திகழ்கிறது. நாட்டு மாடுகள் இன்றும் அழியாமல் இருக்க முக்கியமான காரணமாக இருப்பது இந்த ஏறு தழுவுதல் தான். 

காணும் பொங்கல் :

        உழைப்பே வாழ்வாகக் கொண்ட தமிழர்கள் தங்கள் உழைப்பின் பலனைப் பிறரோடு பகிர்ந்து இன்புறும் நாளே காணும் பொங்கல். தொலைதொடர்பு வசதிகள் இல்லாத அந்த நாள்களில் நெடுநாள் காண இயலாத உறவுகளையெல்லாம் கண்டு இன்புறும் நாள் இது. இந்திரர் அமிழ்தம் இயையவ தாயினும் தமியர் உண்டலும் இலாதவராயிற்றே தமிழர்!  இன்று காணும் பொங்கல் தொலைக்காட்சி காணும் பொங்கலாக மாறிவிட்டது எவ்வளவு வருந்தத்தக்க ஒன்று!

தமிழ்ப்புத்தாண்டு :

            சித்திரை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு என்று நம்மை நம்ப வைத்ததிலும் பெரிய ஏமாற்று வேலை வேறொன்றும் இல்லை. தை முதல் நாள் அறுவடையின் தொடக்கம். ஆடி முதல் நாள் விதைப்பின் தொடக்கம். இந்த இரண்டும் இல்லாமல் சித்திரை ஒன்று புத்தாண்டு  என்பது எந்தவித சம்பந்தமும் இல்லாத ஒன்று. ஒரு வருடத்தின் துவக்கம் நன்மைகளோடு தொடங்கும், புதிய வரவுகளோடு தொடங்கும் என்பது சிறுபிள்ளைகளும் அறிந்த ஒன்று. அப்படியிருக்க உழைப்பின் பலனாக, பட்ட வேதனைகளின் பலனாகக் கிடைத்த புதுநெல், அந்நெல்லை விற்று வந்த புதுவருவாய் ஆகியவற்றின் இன்பத்தைக் கொடுக்கும் தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு ஆகும். இது தமிழாய்ந்த சான்றோரின் முடிபு. ( மதம் சாராமல்  தமிழ் மட்டுமே ஆய்ந்த சான்றோர்) தமிழ்ப் புத்தாண்டு எது என்பதை தமிழ் இலக்கியங்கள் தான் சொல்ல வேண்டும். மற்றோர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வது நமக்குப் பொருத்தமுடையதன்று. சூரியன் மகர இராசியிலிருந்து மீண்டும் மகர இராசிக்கு வரும் நாளே புதுநாள். அதனடிப்படையில் அமைந்ததே தைப் புத்தாண்டு. 

                    நித்திரையில் இருக்கும் தமிழா!

                    சித்திரை இல்லை

                    உனக்குப் புத்தாண்டு

                    அண்டிப்பிழைக்க வந்த

                     ஆரியக்கூட்டம்

                    கற்பித்ததே

                    அறிவுக்கொவ்வா

                    அறுபது ஆண்டுகள்

                    தரணி ஆண்ட தமிழனுக்கு 

                    தை முதல் நாளே

                    தமிழ்ப் புத்தாண்டு!

                                                    -  பாவேந்தர் பாரதிதாசன்.

தைத்திங்கள் வரலாறு அறிவோம். அதுவே நம் தமிழ்ப்புத்தாண்டு என்ற அறிவடைவோம். ஆரியப் படையையும் ஆரியப் பகையையும்  கடப்போம். வாழ்க தமிழ்!


    

Post a Comment

Previous Post Next Post